ரிசர்வ் வங்கியின் உதவியைக் கோருகிறது...
கொல்கத்தா, மார்ச் 13 - ‘யெஸ்’ வங்கியை தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியும் (LVB) கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக் கிறது. சுமார் ரூ. 2 ஆயிரத்து 200 கோடி நிதி திரட்டினால்தான் தப்பிக்க முடியும் என்ற நிலையில், ரிசர்வ் வங்கியின் உதவியை நாடியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, வங்கி களின் குறைந்த பட்ச மூலதன நிதி 9 சதவிகிதம் இருக்க வேண்டும். ஆனால், லட்சுமி விலாஸ் வங்கியின் மூல தன நிதி 2018இல் 7.57 சதவிகிதமாக குறைந்தது. 2019 டிசம்பரில் மேலும் மோசமாக 3.46 சதவிகிதமாக சரிந்து விட்டது.
மூலதனத்தைத் திரட்டுவதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்த லட்சுமி விலாஸ் வங்கி, 2018 மற்றும் 2019-இல் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி திரட்டியது. அத்துடன் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் கடன் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முடிவுக்கும் போனது. ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு தடை விதித்தது. மறுபுறத்தில், லட்சுமி விலாஸ் வங்கியின் வராக்கடன் 23.27 சதவிகிதமாகவும், நிகர வராக்கடன் 9.81 சதவிகிதமாக அதிகரித்து விட்டது. மொத்த வருவாய் குறைந்ததுடன், கடந்த டிசம்பர் மாதத்தில் 335 கோடி ரூபாய் இழப்பையும் சந்தித்தது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்பனை செய்து 250 மில்லியன் டாலர் (1800 கோடி) முதல் 300 மில்லியன் டாலர் வரை (2200 கோடி) நிதி திரட்ட லட்சுமி விலாஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கு 60 சதவிகித பங்குகளை விற்றாக வேண்டும். 49 சதவிகிதற்கு மேல் பங்குகளை விற்க வேண்டுமானால், ரிசர்வ் வங்கி அனுமதி தேவை. எனவே, தற்போது ரிசர்வ் வங்கியின் உதவியை எல்விபி வங்கி நாடியுள்ளது.